சிங்கப்பூர் "பொய்யிற் காவியம்" - குறளோன் வாழ்வு - நாட்டிய நாடகம்



"பொய்யிற் காவியம்"


சிங்கப்பூரில் அறுபது ஆண்டு காலமாக இயங்கி வரும் "திருவள்ளுவர் தமிழ்
வளர்ச்சிக் கழகம்" தனது மணிவிழாவை இந்த ஆண்டு, எதிர் வரும் மார்ச் மாதம்,
24 ம்தேதி, சனிக்கிழமையன்று மாலை 7 மணி அளவில், 60 பார்கர் ரோடில்
அமைந்துள்ள Mrs. Lee Choon Guan Concert Hall, (ACS வளாகத்தில்) வெகு சிறப்பாகக்
கொண்டாட இருக்கிறது.

சிங்கப்பூரர்கள் மத்தியில் திருக்குறள் பயன்பாடு மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி,
தாய் மொழிப் பயன்பாடு, குறள் ஆராய்ச்சி போன்றவற்றில் பங்களிப்பைச் செய்து
வரும் "திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்", தனது அறுபதாம் ஆண்டு நிறைவு
விழாத் தொடர் நிகழ்ச்சிகளில் முதலாவதாகச் சிறப்பு நிகழ்வு ஒன்றினை
ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகத் திருவள்ளுவரின் திருக்குறள் வழி, மனித
வாழ்வை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து, அப்பகுதிகளுக்கு ஏற்ற குறள்களைத்
தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு மாலையாகக் கோர்த்துப் "பொய்யிற் காவியம்" என்கிற
குறள் வழி நாட்டிய நாடகமாக உருவாக்கி வழங்க இருக்கிறது.

திருமாளம் சேதுராமன் அவர்களின் "சுருதிலயா நுண்கலைப் பள்ளி" ஒருங்கிணைக்கும்
இந் நாட்டிய நாடகத்தின் இசை, நடன அமைப்பை தமிழகத்தைச் சேர்ந்த மோகன்
வைத்தியாவும், எழுத்து கவியமைப்பை உள்ளூர்க் கவிஞரான காவியன் முத்துதாசனும்
உருவாக்கியுள்ளனர்.

சுருதிலயாவின் ஆசிரியர்களான கிருத்திகா, தேவராஜன், ராஜசேகர், சந்திரநாத்
பட்டாச்சார்யா மற்றும் மாணவிகளுடன் சிங்கப்பூரில் இசை மற்றும் நாட்டியத்
துறையில் சிறந்து விளங்கும் லாசர், குகன், விவேக் மற்றும் சுஜாதா, துர்கா, ப்ரீதா,
மெலனி, அனு, ரேஷ்மி, திவானி போன்ற நாட்டியத் தாரகைகளும் இணைந்து
நிகழ்ச்சியை படைக்க இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் மகுடம் வைத்தாற் போல, சிறப்பான முறையில்,
வித்தியாசமாக இசை அமைத்து, நாட்டியம் அமைத்து, பாட்டு பாடி, நட்டுவாங்கம்
செய்து நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தித் தருவதற்காக தமிழ் நாட்டிலிருந்து
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை புகழ், இசை மற்றும் நாட்டிய கலைஞர்
மோகன் வைத்தியா சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கிறார் என்பது
குறிப்பிடத் தக்கதாகும்.

இந்நிகழ்ச்சிக்கு, சிங்கப்பூர் மக்கள் கழக இந்திய பல்லிசைக் குழுவின் இயக்குனர்
திருமதி. லலிதா வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக வருகை தர இருக்கிறார்கள்.

நுழைவுக் கட்டணம் : $30.00 / $50.00 / $100.00.

எமது காவிய வரிசையில்
அடுத்த நாட்டிய நாடகம்
முத்தமிழ்க் காப்பியமான "சிலப்பதிகாரம்"
சிலம்புப் பரல்களுடன் குறள் மணிகள் இணைந்த
"சிலம்போவியம்" (இசைப் பாடல்களுடன் இணைந்த முழு நீள நவரச நாட்டிய நாடகம் - கவியோவியம்)


மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர்! - இங்கு
மழலைகள் தமிழ்பேசச் செய்து வைப்பீர்!!
தனக்கெனக் கொண்டுவந்த தேதுமில்லை!!! - பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை”
- கவிஞர் கண்ணதாசன்

Read more...

சிங்கப்பூர் ’தமிழ் முரசு’ - நாடகம் பற்றிய செய்தி



இன்று (01-12-2011) நாடகம் தொடங்குவதைத் தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்த செய்திக் கட்டுரை.

Read more...

ரோம்ஸ் & ஜூல்ஸ் - சிங்கப்பூர் தமிழ் நாடகம்

சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் அவந்த் தியேட்டரின் படைப்பில் ரோம்ஸ் & ஜூல்ஸ் எனும் தமிழ் நாடகம் நடைபெற உள்ளது. திரு செளந்திராஜனின் எழுத்தில் உருவாக்கப்படும் இந்நாடகத்தை சிங்கப்பூரில் ஏராளமான நாடகங்களைப் படைத்த செல்வா அவர்கள் இயக்குகிறார். 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், வசந்தம் பிரபலங்கள் நடிகர் புரவலன். , கார்த்திக் உட்பட்ட 18 நாடக நடிகர்களின் உழைப்புடன் உருவாகும் இந்நாடகம் சிங்கப்பூர் நாடக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என ரோம்ஸ் & ஜூல்ஸ் நாடக குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

செல்வாசெளந்தர்ராஜன்


ரோம்ஸ் & ஜூல்ஸ்

இந்நாடகமானது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும் நாடகம் முழுவதும் நகைச்சுவை ததும்பளவுக்கு “துன்பம் இவ்வளவு நகைச்சுவையாக இருந்ததில்லை” எனக் கூறுமளவுக்கு கடந்த இரண்டரை மாதங்களாக நடந்த ஒத்திகைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகூட்டப்பட்டு நல்லதொரு வடிவத்திற்கு வந்துள்ளது. அழகான தமிழில், அடுக்கடுக்கான வசனங்களில் அனுபவமிக்க நாடகக் கலைஞர்களின் திறமையான நடிப்பில் உருவாகும் இந்நாடகம் உங்களை நிச்சயம் கவரும் என்பதில் மாற்றமில்லை.

வெரோனா நகரின் மொண்டேக்யூ, கெபியுலட் ஆகிய இரு குடும்பங்களும் வெகுகாலமாய் பகைகொண்டு, இக்குடும்பத்தில் உறவுகளும் ஆதரவாளர்களும் அவ்வப்போது சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நகரில் நடக்கும் விருந்தில் அறிமுகமாகும் மொண்டேக்யூ குடும்பத்தைச் சேர்ந்த ரோம்ஸுக்கும் ஜூல்ஸ்க்கும் காதல் மலர்கிறது. பகைக் குடும்பத்தில் மலரும் காதல் ஒரு துயரத்தை எட்டுகிறது. அது அடையும் துயரத்தை கலகலப்புடன் ஒரு புதியதொரு நாடகத்திற்குரிய அமைப்புடன் ரோம்ஸ் & ஜூல்ஸ் படைக்கவிருக்கிறது.



இடம்

தோபி காட் ரயில் நிலையம் அருகிலுள்ள ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் (SOTA) எனும் கலையரங்கில் இந்நாடகம் வரும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி முதல் 9:15 வரை நடைபெறுகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கலையரங்கில், அழகான ஒளி, மற்றும் ஒலி அமைப்புக்களுடன் சிறப்பாக நடைபெறும் இந்நாடகத்தை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

1 Zubir Said Dr, Singapore 227968





நுழைவுச் சீட்டுக்கு ..

நாடகத்தினைக் காண விரும்புபவர்கள் நுழைவுச் சீட்டிற்கு 82685 105 எனது எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.


சிறுகுறிப்பு: மொண்டேக்யூ பெருமகனார், கெபியுலட் பெருமகனார், கெபியுலட் மனைவி, ரோம்ஸ், ஜூல்ஸ், பெங்வோலியோ, டைபோல்ட், பெரீஸ், மெர்க்கூஷோ, பால்தாசர், சோனியா, சாம்சன், கிரேகரி, எஸ்கலஸ், லாரன்ஸ், பீட்டர் என நீளும் பாத்திரங்களில் பால்தாசர் எனும் ஒரு சிறிய பாத்திரத்தில் நானும் நடிக்கிறேன்.



Read more...

திருமண அழைப்பிதழ் !

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

நிகழும் வைகாசி மாதம் 25ம் தேதி புதன்கிழமை(ஜூன் 8) காஞ்சியிலுள்ள ஸ்ரீ நாராயண குருபூஜை மண்டபத்தில் செல்வி. கௌரியுடன் திருமணம் நடைபெறவுள்ளது. இப்பதிவின் மூலம் எனது நண்பர்கள் அனைவருக்கும், இப்பதிவின் வருகையாளர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் விடுவித்து திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தியருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருமண அழைப்பிதழ் மற்றும் இன்னபிற விபரங்களை எனது http://mywedding.nilavan.net வலைத்தளத்தில் காண்க..

அன்புடன்,
தமிழ்நிலவன் (எ) விஜயலட்சுமணன்
கௌரி

Read more...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


Read more...

எ கலப்பை 3.0 - புதிய வெளியீடு



நான் பிளாக்கில் எழுத ஆரம்பித்த போது எனக்கு தமிழில் எழுத கை கொடுத்தது எ கலப்பை எனப்படும் தமிழ் எழுதி தான். எ கலப்பை மென்பொருளை தமிழ்மணத்தில் இடப்பட்டுள்ள ஒரு சுட்டியின் மூலம் தேர்ந்தெடுத்து தரவிறக்கம் செய்வது வழக்கம்.

அதன்பின் பரவலாய் தமிழை கணிப்பொறியில் பயன்படுத்த ஆரம்பித்த போது பயன்படுத்தப் படும் ஒவ்வொரு கணிப்பொறியிலும் முதலாவதாய் எ கலப்பை மென்பொருளை உள்ளீடு செய்வது தான் எனது முதல் வேலையாயிருக்கும். எ கலப்பை மென்பொருளை க்ளிக் செய்தவுடன் அதில் முகுந்த் எனும் பெயரும் ஆழமாய் பதிந்துவிட்டது எனலாம். பின்னொரு நாளில் நண்பர் முரளியின் அறிமுகத்தின் மூலம் முகுந்த் அவர்கள் பெங்களூரிலே இருக்கிறார், அறிமுகம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. முகுந்த் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார்.

எ கலப்பை மென்பொருளானது வின்டோஸ் விஸ்டா, கூகிள் குரோம் ஆகியவற்றில் பயன்படுத்த முடியாததாகி இருந்தது. வளரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தன்னை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எ கலப்பை இருந்தது. முகுந்த் அவர்கள் சேது, விஜய் குப்தா, அருணன், வெங்கடேஷ், குணசேகர் ஆகியோர்களின் பங்களிப்புடன் சேர்ந்து எ கலப்பை 3.0 வெளியிட்டிருக்கிறார்.

புதியதொரு பரிமாணத்தில் எ கலப்பை மென்பொருள் இணைய உலகில் நடைபோட்டு வருகிறது. ஏராளமான தரவிறக்கங்களைக் கொண்டு வருகிறது என முகுந்த் அவர்களின் மூலமும் கேள்வியுற்றேன். இப்புதிய வெளியீட்டில் தமிழ் 99, பொனடிக், டைப்ரைட்டர், பாமினி, இன்ஸ்கிரிப்ட் ஆகிய விசைப் பலகைகளை செயல்படுத்த முடியும்.



எ கலப்பை உள்ளீடு செய்வது எப்படி?

1. தமிழா.காம் இணையப் பக்கத்திற்கு செல்லவும்.

2. இணையப் பக்கத்தில் Projects சொடுக்கி, பின் e Kalappai சொடுக்கவும்,

3. தரவிறக்க சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.



4. தரவிறக்கம் செய்யப்பட்ட ஃபோல்டரில் சென்று eKalappai-3.0-installer.exe யை செயல்படுத்தவும்.

5. காணப்படும் பெட்டியில் தேர்வு செய்து Install செய்யவும்.

6. உங்களுடைய Desktop ல் கீழ்க்கண்ட ஐகான் கிடைக்கலாம். ஐகானை செயல்படுத்தினால் விண்டோஸின் வலதுகீழ்ப் பக்கத்தில் உள்ள ட்ரேயில் எ கலப்பை ஐகான் கிடைக்கும்.

7. அதனில் சென்று மௌஸின் இடது பொத்தானை செலுத்தி Settings தெரிவு செய்து விருப்பப்பட்ட விசைப்பலகை வடிவங்களையும், அதனை தெரிவு செய்ய சுருக்கக் குறியீடுகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.


இப்புதிய எ கலப்பை வெளியீட்டினைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலதிக விபரங்கள், கருத்துக்களுக்கும் mugunth@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அத்துடன் தமிழா.காம் தமிழ் தொடர்பான மென்பொருள்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜாவா, டாட் நெட், பிஹெச்பி போன்றவற்றில் திறமை உள்ளவர்கள் தமிழா.காமின் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

Read more...

சிங்கப்பூர் - ஒரு பார்வை ஒரு பயணம்

சிங்கப்பூர் வந்து ஒரு மாதமும் முடிந்து விட்டது. இங்குள்ள இடங்கள், வழிகள், மக்கள் என ஓரளவு பழக்கமாகிக் கொண்டு வருகிறது. உலக வரைபடத்தில் சிறு புள்ளியைப் போல் காணப்படும் சிங்கப்பூரில் வியத்தக்க மாற்றங்களைக் கொண்டு நாடு இயங்கிக் கொண்டு வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா என ராமராஜன் ஒரு படத்தில் சிங்கப்பூரை சுற்றிக் காண்பிப்பார், எப்போதோ ஒரு முறை அந்த நாளில் சிங்கப்பூரை சினிமா படங்களில் பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

அன்றாட சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக எம்.ஆர்.டி யைச் சொல்லலாம். நாட்டின் அனைத்து பாகங்களும் சரியாக இணைக்கப்பட்டு எந்த மூலைக்கும் எளிதில் பயணம் செய்ய ஏதுவாகிறது. வடக்கு தெற்கு,வடக்கு கிழக்கு, மேற்கு கிழக்கு, வட்டப்பாதை என திசைகளுக்கு ஒன்றாக 3 (அ) 5 நிமிடங்களுக்கு ஒன்றாக குறுக்கும் நெடுக்குமாக ரயில் சென்று கொண்டே தான் இருக்கின்றன. இந்த ரயில்கள் சந்திக்கும் இடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு திசைக்கு மாற்றிச் செல்லவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. ஆகையினால் எங்கும் சிரமப்படாமல் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல எளிமையாக வழியமைக்கப்பட்டுள்ளது.

நான் தற்போது சிங்கப்பூரின் வடக்குப் பகுதியிலுள்ள மார்சிலிங்கில் தங்கியிருக்கிறேன். மார்சிலிங்கில் இருந்து நான் வேலை பார்க்கும் ராஃபில்ஸ் பிளேசஸுக்கு 40 நிமிட பயணம் நேரமாகும். ரயில் பயணங்கள் குளிரூட்டிகளாக உள்ளதால் இதமானதாக இருந்தாலும், அலுவலக நேரங்களில் சற்றே நெரிசலாக இருக்கும், ஆனால் ஒருவர் மற்றொருவரை உரசாத அளவுக்கு தூரம் உள்ள வகையில் பயணம் செய்கின்றனர். ரயில் பயணத்துக்கென ஈஸிலிங்க் (அ) நெட்ஸ் அட்டைகள் விற்கப்படுகின்றன. இந்த அட்டைகளின் மூலம் செல்போன்களுக்கு டாப்அப் பணம் ஏற்றி வைப்பது போல ஏற்றிக்கொண்டு ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலுள்ள இயந்திரத்தில் தேய்த்து விட்டு உள்ளே போனால் சேருமிடத்தின் வெளிவாசல் வரைக்குமான கட்டணத்தை தானாகவே அட்டைகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

இது மாதிரியான நுட்பத்தை பெங்களூர் மெட்ரோ ரயிலிலும் அறிமுகப் படுத்தப் போகிறார்கள் என ஏற்கனவே படித்ததை இங்கே பார்த்தவுடன் உணர முடிந்தது. எனக்குத் தெரிந்து ஷ்ரேயா, த்ரிஷா மினி ஸ்கர்ட்டில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஷுட்டிங் நடக்கையில் எப்படித்தான் அந்த ஆடையைப் போட்டி போட்டிக் கொண்டு நடிக்கிறார்களோ, சினிமா விழாக்களில் வரும் சிலர் எப்படித்தான் உட்காருகிறார்களோ என தேவையற்ற கவலையும் பட்டிருக்கிறேன், உங்களில் சிலரும் ஆதங்கப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கே மினி ஸ்கர்ட்டில் வரும் பள்ளிப் பெண்கள், அலுவலகம் செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என சகலரும் மினி ஸ்கர்ட்டில் உலா வருவது சாதாரண்மாக உள்ளது. ஆனால் மினி ஸ்கர்ட் ரொம்ப அழகாய்த் தான் இருக்கிறது(!).



அவர்கள் எப்படி வந்தாலும் வம்பிலுப்பது, கலாய்ப்பது, தேவையற்ற சேட்டைகள் செய்வது என எந்தப் பிரச்சனையும் பெண்களுக்கு ஏற்படுவதில்லை, ஏனெனில் பெண்களைப் பாதுகாப்பதற்கென சட்டங்கள் கடுமையாக இருப்பதால் மக்களும் அதை உணர்ந்து ஒழுக்கமாக உள்ளனர் என்றே நினைக்கின்றேன். ரயிலில், ரயில் நிலையங்களில், அலுவலகங்களில், மின்தூக்கிகளில், சாலைகளில் என ஒவ்வொரு இடங்களிலும் பொருத்தப்பட்ட காமிராக்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. எம்.ஆர்.டி ரயில்களில் தண்ணீர் குடிக்கக் கூடாது, சாப்பிடகூடாது, புகை பிடிக்கக் கூடாது, ரயில் பாதை தண்டவாளங்களில் இறங்கக்கூடாது, ரயில் செல்லும் இடத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள், பெரியவர்களுக்கு இடம் கொடுப்பது, வரிசையாய் செல்வது, வாசலில் நிற்காமல் உள்ளே செல்வது என ஒவ்வொன்றும் அறிவுப்புகள், தொலைக்காட்சியில், வானொலிகளில் அறிவுறுத்தப்படுகிறது (அ) விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீவிரவாதம் நுழைய வாய்ப்புகள் இல்லாத வகையில் கட்டுப்பாடாக உள்ள நாட்டில் “சந்தேகப்படும் வகையிலான நபரோ, பொருளோ பார்த்தால் உடனே அதிகாரிகளூக்கு தெரியப்படுத்துங்கள்” என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த அளவுக்கு பொறுப்புமிக்கதாக தமது நாட்டினை கண்காணித்து வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

சிங்கப்பூரின் பிரதான மற்றும் முதன்மை மொழியாக ஆங்கிலம் உள்ளது. அது தவிர மலாய், மாண்டரின்(சீன மொழி), தமிழ் ஆகிய மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளது. பேருந்துகள் ரயில்கள் உள்ள அறிவுப்புகள், குறிப்புகள் என அனைத்தும் நான்கு மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழனாக இருந்து நமது மொழி சிங்கப்பூர் நாட்டில் அங்கீகாரம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயமாகும். இங்குள்ள இந்தியர்களில் 55 விழுக்காட்டினர் தமிழர்கள் இருக்கின்றனர். சிங்கப்பூர் பற்றிய மேலதிகத் தகவல்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம், தற்சமயம் சிங்கப்பூரில் நான் கலந்து கொண்டு இரண்டு தமிழ் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.



சிங்கை லவண்டர் பகுதியில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ் மையத்தில் பட்டிமன்றம் நடக்க இருப்பதை அறிந்து சிறீதரன், நடராஜ் ஆகியோருடன் கடந்த ஞாயிறு(அக் 31) மாலை 6 மணிக்கெல்லாம் சென்றோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தீபாவளியின் சிறப்பை உணர்த்துகின்றன, உணர்த்துவது இல்லை எனும் தலைப்பில் தமிழ்ப் பட்டிமன்ற கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த கலைக் கழகமானது சிங்கப்பூரில் 50 பட்டிமன்றங்களை சிறப்பாக முடித்து 51வது பட்டிமன்றமாக இது நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக திரு. ஜோதி மாணிக்கவாசகமும் உணர்த்துகின்றன எனும் தலைப்பில் திரு. குமாரசாமி, திருமதி அகிலா, திருமதி நிஷா ஆகியோரும், உணர்த்துவதில்லை எனும் தலைப்பில் திரு அஜ்மீர், செல்வி பல்கீஸ், திரு கோபிநாத் ஆகியோரும் பேசினார்கள். தொலைக்காட்சிகளிலேயே பட்டிமன்றம் பார்த்துப் பழகிப்போன எனக்கு இந்த நேரடிப் பட்டிமன்றம் கலகலப்பான அனுபவத்தைத் தந்தது. நடுவர் தான் சும்மா உட்காருந்து தான் இருக்கப்போகிறேன் என ”சும்மா..சும்மா..” என விசுவின் பாணியில் ஆரம்பத்திலேயே கலகலப்பூட்டினார். அடுத்து ஆரம்பித்த குமாராசாமியில் ஆரம்பித்து அனைவருமே யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை எனச் சொல்லும் வகையில் தங்களின் பேச்சுத் திறமையையும், வாதத் திறமையையும் வெளிக்காட்டினார்கள்.

இறுதியில் பார்வையாளர்கள் இருவர் யாராவது கருத்துச் சொல்லலாம் என வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த இருவரில் ஒருவராக நான் எழுந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளானது தொலைக்காட்சி இல்லாத சமயங்களில் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியலிட்டு, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புக்கள் சாப்பிட்டு, நண்பர்கள் பார்த்து, உறவுகள் கூடிக் கொண்டாடிய நிலையை நம்மில் இருந்து மறைத்து நம்மை தொலைக்காட்சிக்கு முன் அமரவைத்து காசு சம்பாதிக்கும் ஒரு தொழிலாக நடத்துகிறார்கள் தவிர, தீபாவளியின் சிறப்பை உணர்த்துவதில்லை எனும் கருத்தைக் கூறினேன். நடுவர் தனது முடிவுரையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமக்குள் மகிழ்ச்சியைத் தரலாம் ஆனால் தீபாவளியின் சிறப்பை உணர்த்துவதில்லை எனத் தீர்ப்பு கூறினார்.




இன்று மாலை 6 30 மணிக்கு கவிஞர் ந.வீ. விசயபாரதியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடக்கிறது என்பதனை தங்கமீன்.காம் எனும் இணையதளத்தின் மூலம் அறிந்தேன். அலுவலகம் முடித்து நேராக செரங்கூனில் அமைந்துள்ள பி.ஜி.பி மணிவிழா மண்டபம் சென்றேன். ந.வீ.விசயபாரதி அவர்களைப் பற்றி அதிகம் எனக்குத் தெரியாது எனினும் அவரது வலைத்தளம், சிறுகதைகள் என வெளிவந்தது பார்த்து ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன். மேலும் விபரங்கள் தெரிந்தால் அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன். பூட்டுக்கள், புலமைக்கு மரியாதை, பூக்கள் உடையும் ஓசை எனும் மூன்று நூல்கள் பற்றிய ஆய்வுரையை தங்கமீன் மணிமாறன், சோமசுந்தரம், விஜி ஜகதீசன் ஆகியோர் பேசினார்கள். மனித மனங்களுக்குள் நம்பிக்கையின்றி மனித நேயங்களை பூட்டி வைத்திருக்கும் மனிதர்கள், அந்தப் பூட்டுக்களை புறக்கணிக்க வழிகள் எனும் வகையில் அமைந்துள்ள கவிதைகளை பூட்டுக்கள் நூலிலும், இலக்கியங்களில் கவஞர்கள் கூறியவற்றினை எளிய தமிழில் விளக்கும் வகையில் புலமைக்கு மரியாதை நூலும், தமிழ், காதல், தாய், இயற்கை, கோபம், மனம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கவிதைகளாக பூக்கள் உடையும் ஓசை நூலும் அமைந்துள்ளதை உரையாற்றிய ஆய்வுரையின் மூலம் அறிய முடிகிறது.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்பளிப்பாய் கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட், ஆப்பிள் அடங்கிய பை ஒன்று கொடுத்தது புதுமையாகவும், சிறப்பாகவும் அமைந்தது. இம்மாதிரியான விழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சியாகமும், தமிழின் சுவையை, உரையை, நுட்பங்களை அறிவதற்காகவும் இனிமையாக அமைந்து விடுகின்றன. இனிவரும் காலங்களில் கிடைக்கின்ற நேரங்களில் சென்று கலந்துகொள்ள வேண்டும் எனும் ஆவலையும் ஏற்படுத்துகிறது. மற்றொருமொரு கட்டுரையில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

Read more...

தற்சமயம் சிங்கப்பூரிலிருந்து....


அனைவருக்கும் இனிய வணக்கம்,

எனது வலைப்பக்கத்தில் வலைப்பதிவேற்றி அதிக நாட்கள் ஆகின்றது. வேலைப்பணி காரணமாகவும் மற்றசில தனிப்பட்ட காரணங்களினாலும் செய்ய முடியாததாகி விட்டது. நான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் என்பதை அறிவீர்கள். ஆனால் தற்சமயம் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணிப்பொறி நிபுணராய் பணியாற்றி வருகிறேன்.

சிங்கப்பூர் உங்களனைவருக்கும் அறிமுகமான நாடு. சுத்தமான, சுகாதாரமான, மிகவும் கட்டுப்பாடுள்ள நாடு எனக் கேள்விப்பட்டிருப்பீர்களெனினும் நமக்கான சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் மொழியை அலுவலக மொழியாகக் கொண்டுள்ள நாடு. ஆக நம்ம ஊரில் இருப்பதைப் போன்றதொரு நினைவை நம்முள் நிறுத்தும் பண்பான நாடு சிங்கப்பூர். இந்த மாதம் அக்டோபரில் இருந்து இங்கே பணிசெய்து வருகிறேன் எனபதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் சிங்கப்பூர் பற்றிய பதிவுகள்...


நன்றி வணக்கம்.

Read more...